Lord Siva

Lord Siva

Thursday 22 March 2012

நார்ச்சத்து…

Posted On March 22,2012,By Muthukumar
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி.  பொதுவாக மனிதர்களுக்கு நோய் உண்டாவதற்கு முக்கியக் காரணம்  மனச்சிக்கலும், மலச்சிக்கலும் என்கின்றனர் சித்தர்கள்.  மனச்சிக்கலை சீராக்க யோகாசனம், தியானம், மற்றும் சரப்பயிற்சி உதவும்.  ஆனால், மலச்சிக்கலை சீராக்க சீரான உணவு முறை மட்டுமே உள்ளது.
எளிதில் சீரணமாகும் உணவுகளில் ஒன்றுதான் நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகள்.  நார்ச்சத்து மிகுந்த உணவுகளே மலச்சிக்கலை போக்கக் கூடியது.  மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை உட்கிரகிக்கும் தன்மையும் கொண்டது.
நார்ச்சத்து மிகுந்த உணவுகளில் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், பெக்டின், லிக்னின் போன்றவை நிறைந்துள்ளன. இவை உணவை எளிதில் சீரணிக்கும் நொதிகளாகும்.

நார்ச்சத்து இருவகைப்படும்.  அவை,
நீரில் கரையும் நார்கள் (Soluble fiber)
நீரில் கரையாத நார்கள் (Insoluble fiber)
நீரில் கரையும் நார்கள்
இவை நீரில் கரையக்கூடியவை.  இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைத்து இரத்தத்தின் பசைத் தன்மை அதாவது கடினத் தன்மையைத் தடுக்கிறது.  இதனால் இரத்த அழுத்த நோயின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
நீரில் கரையாத  நார்கள்
செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்களின் செரிமானத்தைத் தூண்டி, உணவைச் செரிப்பித்து மலத்தை அதிகளவு வெளியேற்ற உதவுகிறது.
இரைப்பை, சிறுகுடல் பகுதியில் உள்ள கார்போ-ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தை நார்கள் குறைக்கின்றன.  இதனால் உடலில் அதிகளவு சர்க்கரை, கொழுப்பு சேர்வது குறைக்கப்படுகிறது.
நார்கள் குடலினுள் அதிகளவு நீரை உட்கிரகிக்கச் செய்கின்றன.  இதனால் வயிறு நிறைந்ததுபோல் உணர்வு ஏற்படும்.  இத்தன்மை உண்ணும் உணவின் அளவைக் குறைக்கிறது.  இதுவே உடல் எடை குறையவும் காரணமாகிறது.
மேலும் நார்கள் பித்த உப்புகள் (Bile salt) கொழுப்பு போன்றவற்றை குடல் உட்கிரகிக்கச் செய்யவிடாமல் தடுத்து வெளியேற்றுகிறது.  இதனால் குடலில் புண், அஜீரணக் கோளாறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நார்கள் இரத்தத்துடன் கலந்து அடர்த்தி குறைந்த லிப்போ புரதத்துடன் இணைந்த கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
புற்றுநோய்  தடுப்பு
நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் அதிகம் உட்கொள்பவர்களுக்கு GIT (Gastro Intestinal Tract) உணவுக் குழலில் புற்றுநோய் உண்டாவததைத் தடுப்பதாக அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  நார்கள் குடலின் உள் பகுதியில் உணவை சீரணித்து மீதப் பொருளை மலமாக்கி வேகமாக வெளியேற்ற உதவுகிறது.  இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது.  புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களை மலத்துடன் சேர்த்து வெளியேற்றுவதால் புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
தேவையற்ற நச்சுப் பொருள்களை நீக்க
நார்கள் அதிகளவு நீரை உட்கிரகிப்பதால் உண்ணும் உணவில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை எளிதாக மலத்துடன் வெளியேற்றுகின்றன.
நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் செரிமான மண்டலத்தில் மாற்றம் அடைவதற்கு நார்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
மாவுப் பொருள் சர்க்கரைப் பொருளாக மாற்றப்பட்டு, அது புரதம், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலம், கிளிசரோல் ஆக மாற்றமடைகிறது.  இத்தகைய மாற்றத்தை சீராக செயலாற்ற நார்கள் மிகவும் உதவுகின்றன.
ஒரு நாளைக்கு நார்ச்சத்து 28-35 கிராம் அளவு தேவைப்படுகிறது.
இவை கீரைகள், பசுமையான காய்கறிகள், பழங்கள் இவற்றில் அதிகமுள்ளது.  அதுபோல் அதிகம் தீட்டப்படாத அரிசி, கோதுமை, பார்லியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன.
எனவே நலமான வாழ்வுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்

No comments:

Post a Comment