Lord Siva

Lord Siva

Sunday 4 March 2012

ஆணுறுப்பு மொட்டில் அரிப்பு நோய்



Posted On March 4,2012,By Muthukumar

மொட்டுத் தோல் அழற்சி

கதிரையில் அமர்ந்திருந்த அவருக்கு சற்று லட்ஜையானது. காரணம் எனது கண்கள் அவரது அரைப் பகுதியில் திடீரென மேச்சல் போட்டு நகர்ந்ததுதான்.


வேறொன்றுமில்லை. தனது ஆண்குறி நுனியை ரவுசருக்கு மேல் கைவைத்துக் கசக்கியிருந்தார். நீண்ட நேரமல்ல.

திடீரென அவரது அவரது கை தன்னிச்சையாக அரிப்பெடுத்த இடத்தை கசக்கிவிட்டது. எனது கண்ணும் என்னையறியாது அதைப் பார்த்துவிட்டது. 

"அரிப்பெடுக்கிறதா?" மருத்துவர்களுக்கு இவை பற்றி நேரிடையாகக் கேட்பதில் தயக்கமெதும் இல்லை.

"ஆம்" என்றார்.


இளைஞர் 30-35 வயதிருக்கும். அவருக்கு சிலகாமாக நீரிழிவு. ஒழுங்காக மருந்து சாப்பிடுவதில்லை. அதனால்தான் அவரது ஆணுறுப்பு மொட்டின் தோலில் அரிப்பு எடுத்திருந்தது. 

மொட்டு தோல் அழற்சி

மொட்டு தோல் அழற்சியினாது ஆண்குறியின் நுனியின் தோலில் ஏற்படுவதாகும். அதேபோல மொட்டிலும் ஏற்படலாம்.
  • இது எந்த வயதிலும் ஏற்படக் கூடிய ஒன்றே. 
  • பொதுவாகச் சுன்னத்துச் செய்யப்படாத ஆண்களில் ஏற்படுகிறது. 
  • அதேபோல 4 வயதிற்குக் குறைந்த ஆண்குழந்தைகளிலும் ஏற்படலாம்.
அழற்சியென்பது ஒரு ஒரு அறிகுறியே.

இது பல்வேறு நோய்களாலும் ஏற்படலாம்.
  • கண்டிடா பங்கஸ் தொற்று, 
  • பாக்டீரியா நோய், 
  • பாலியல் தொற்று நோய்கள், 
  • தோல் அரிப்பு, எக்ஸிமா போன்ற தோல் நோய்கள் காரணமாகலாம்.

அறிகுறிகள் என்ன?

  • அவ்விடம் சற்றுச் சினத்து, அரிப்பெடுத்து, சற்று வேதனை அளிக்கும். 
  • இது ஒரு இடத்தில் மட்டும் ஏற்படலாம் அல்லது பரந்து முழுமையாக மொட்டையும் அவ்விடத்து சருமத்தையும் பாதிக்கலாம்.
  • சற்று தீவிரமான நிலையில் மொட்டு சிவத்து, வீங்கி, கடுமையான வேதனையை அளிக்கும். 
  • அத்துடன் அப்பகுதியிலிருந்து சீழும் வெளியேறலாம். 
  • அத்தகைய நிலையில் மூடியுள்ள தோலை இழுத்து விரிப்பது முடியாத காரியமாக இருக்கும். 
  • சிறுநீர் கழிப்பதில் எரிவும் ஏற்படலாம்.

காரணங்கள் என்ன?

பல காரணங்களால் ஏற்படுகிறது.

1.    சுகாதாரம் பேணாமை
தினமும் குளிக்கும்போது தோலை விரித்து உட்புறம் வெளிப்புறம் யாவற்றையும் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

2.    பாலியல் அல்லாத தொற்று நோய்கள்

  • கிருமித் தொற்று எமது சருமத்தில் பல்வேறு கிருமிகள் உயிர்வாழ்கின்றன. ஏதாவது காரணத்த்தால் அவை பெருகினால் கிருமித்தொற்றாக மாறிவிடும். 

முக்கியமாக கண்டிடா பங்கஸ் அவ்வாறான ஒன்றாகும். பெண்களில் யோனித் தொற்றுக்கு இக் கிருமி முக்கிய காரணமாகும். 

  • முக்கியமாக நீரிழிவு உள்ளவர்களின் சிறுநீரில் சீனி வெளியேறுவதால் பங்கஸ் கிருமி பெருகுவதற்கான சாத்தியம் அதிகம். இவர்களது சிறுநீரில் சீனி இருப்பதால் அதைக் கழித்த பின்னர் தோலில் ஒட்டியிருக்கக் கூடிய ஒரிரு துளி சிறுநீரில் உள்ள சீனி பங்கஸ் பெருகுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. மேற் கூறிய நபருக்கு அரிப்பு ஏற்பட்தற்குக் காரணம் இதுதான். 
  • முன்தோல் (Foreskin) இறுக்கமாக இருத்தல் மற்றொரு காரணமாகும். இதை மருத்தவத்தில் முன்தோல் இறுக்கம் (Phimosis) என்பர். 
 பொதுவாக குழந்தைகளில் அவ்வாறு இருக்கும். சுமார் 4-5 வயதாகும்போது இது சுலபமாக விரிக்கக் கூடியதாக மாறிவிடும். அதுவரை தோலின் உட்புறம் இருக்கும் வெண்படலத்தை (Smegma)அகற்றுவது சிரமமாக இருக்கும்.

முன்தோல் இறுக்கம்

இந்த வெண்படலமானது தோலின் அடியில் தோன்றும் சீஸ் போன்றதாகும். உதிர்ந்த சருமத் துகள்கள், வியர்வை ஆகியவற்றால் இது தோன்றுகிறது. வழக்கமாகக் குளித்துச் செய்வதால் அகன்றுவிடும். முன் தோல் இறுக்கமாக இருந்து கழுவ முடியாததால் உள்ளே சேர்ந்து அழற்சியை ஏற்படுத்தும்.

3.    பல பாலியல் தொற்று நோய்களும் முன்தோல் அழற்சிக்கு காரணமாகலாம். உதாரணமாக

ஹெர்பீஸ்

  • ஹெர்பீஸ் (genital herpes),  
  • கொனரியா (gonorrhoea),  
  • கிளாமிடியா  (chlamydia) போன்றவை அவ்வாறு ஏற்படுத்தும். 
கொனரியா- சீழ் வடிகிறது
 இவை அழற்சியை மாத்திரமின்றி சிறுநீர்ப்பாதையில் எரிவு, சீழ்போல வடிதல் போன்ற அறிகுறிகளையும் கொண்டிருக்கும்.


4.    ஒவ்வாமையும் உறுத்தும் பொருட்களும். மொட்டும் அதன் தோலும் மிக மிருதுவான பகுதிகளாகும். காரமான எவையும் அதன் தோலை உறுத்தும், அழற்சியையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தலாம்.

  • சில கடுமையான சோப் மற்றும் சவ்லோன், டெட்டோல் போன்ற கிருமி நீக்கி மருந்துகள் அவ்வாறானவையாகும்.
  • கடுமையாக அழுத்தித் தேய்ப்பதும் அடிக்கடி கழுவுவதும் கூட அழற்சியை ஏற்படுத்தும. அவ்வானவர்கள் கழுவிய பின்னர் ஈரலிப்பை ஒற்றி  உலர வைப்பது அவசியம்.
  • சிலருக்கு உடலுறவின் போது உபயோகிக்கும் ஆணுறை, வழுவழுப்பாக்க பயன்படுத்தும் கிறீம் வகைகளும் அவ்வாறு அழற்சியை ஏற்படுத்தலாம்.
  • உள்ளடைகளை துவைக்க உபயோகித்த சோப் போன்றவற்றை செம்மையாகக் கழுவாதிருப்பதும் காரணமாகலாம்.

பரிசோதனைகள்

  • குருதியில் சீனியின் அளவைப் பார்ப்பது அவசியம். நீரிழிவு இருக்கிறதா என்றறியவும், எற்கனவே இருப்பது தெரிந்தால் அது எந்ந நிலையில் இருக்கிறது என்றறியவும் இது தேவை. 
           நீரிழிவை ஆரம்பத்திலேயே கண்டறிதல் பற்றி அறிய
  • சிறுநீர்ப் பரிசோதனை, 
  • அவ்விடத்திலிருந்து சுரக்கும் திரவத்தை எடுத்து என்ன கிருமி இருக்கிறது என்பதை அறிவதற்கான பரிசோதனையும் தேவைப்படலாம்.
  • பாலியல் தொற்று நோய்களுக்கான பரிசோதனையகளும் தேவைப்படலாம்.

மருத்துவம்

காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.
நீரிழிவு இருந்தால் அதனைக் கட்டுப்பாட்டிற்கள் கொண்டுவருவது அவசியமாகும்.

மேற் குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தியதுடன் பங்கசுக்கு எதிரான கிறீம் மருந்து பூசியதும் குணமாகியது.

1 comment: