Lord Siva

Lord Siva

Sunday 22 July 2012

முகத்தில் திடீர் வலி ஏற்படுவதை நீக்கலாம்!

Posted On July 22,2012,By Muthukumar
ஆயுர்வேத மருத்துவர்களிடம், அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி, "டாக்டர், இந்த நோய்க்கு என்ன பெயர்?' என்பது. இப்படி கேட்பவர்கள் பலர், அலோபதி மருத்துவர்களிடம் சென்று, தங்கள் நோய்க்கு, லத்தீன் மொழியில் ஒரு பெயர் கற்றுக் கொண்டு வருகின்றனர். அந்த நோய்க்கு என்ன சிகிச்சை, நோய் முற்றிலும் குணமாகிறதா என்பது தான் கேள்வி.
ஆயுர்வேதத்தில், இந்த விதமான நோய்களுக்கு, நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமாக்கப்படுகின்றன. இப்படி, ஒரு நோயை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். 67 வயதான ஒருவர், 6 மாதமாக, தலையில் ஒரு வித வலியுடன் அவதிப்பட்டார். தலையிலிருந்து மேல் உதடு வரை, மின்சாரம் பாய்வது போல் தெறிக்கும் வலி. பல் தேய்க்கும்போது, உதட்டில் விண்ணென்று வலி தோன்றும். பல் டாக்டர்களை அணுகி, ஆலோசனை பெற்றார். அமெரிக்க டாக்டர்களிடமும் தொடர்பு கொண்டார். சென்னையில் மிகப் பிரபலமான நியூராலஜிஸ்டிடம் அறிவுரை பெற்றார்.
"டிரைஜெமினல் நியூரால்ஜியா'
அவருக்கு, "டிரைஜெமினல் நியூரால்ஜியா' என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளதாக கூறப்பட்டது. சென்னையில் அவருக்கு, "டெக்ரடால்' என்ற மருந்து வழங்கப்பட்டு இருக்கிறது. அலோபதியில் இந்த மருந்து, சாதாரணமாக காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். இந்த மருந்தை, குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளும்படி, கூறப்பட்டது. இப்படி, ஒரு மருந்தை நீண்டகாலம் எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி, யாரும் அவருக்கு எடுத்துரைக்கவில்லை.
இரவில் வலி இருந்ததால், அவருக்கு தூக்கமும் சரியாக வரவில்லை. இதற்கு, தூக்க மாத்திரையும் சேர்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியும் அவருக்கு, வலியிலிருந்து எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்த கட்டத்தில் அவர், ஆயுர்வேத மருத்துவத்தை நாடி வந்தார்.
ஆயுர்வேதத்தில், இந்த நோய் முகத்தில் உள்ள வாயுவின் சீற்றத்தால் உண்டானது என்று கணிக்கப்பட்டது. முகத்தில் உள்ள, சீற்றமடைந்த வாயுவை வெளியேற்றுவது தான், சிகிச்சையின் முக்கிய நோக்கம். இதன் பொருட்டு, அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வாயு சீற்றத்தால் உபாதை
சிகிச்சையின் முதல் கட்டமாக, வாயுவின் சீற்றத்தை கட்டுப்படுத்தும் உணவுகளும், ஆயுர்வேத மருந்துகளும் கொடுக்கப்பட்டன. அலோபதி மருந்துகள், படிப்படியாக குறைக்கப்பட்டன. வலி குறைந்து அவர், நன்றாக தூங்க ஆரம்பித்தார். சிகிச்சையின் இரண்டாம் கட்டமாக, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஸ்னேஹபானம் என்ற முறையில், நெய் மருந்து கொடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு, வஸ்தி எனும் எனிமா சிகிச்சையும், நஸ்யம் எனும், மூக்கில் மருந்துகள் செலுத்தும் சிகிச்சையும், சிரோவஸ்தி என்ற, தலையில் மருந்துத் தைலங்களை நிற்க வைக்கும் சிகிச்சையும், மேற்கொள்ளப்பட்டன.
சிகிச்சைகள் முடிந்ததும், வலி முற்றிலும் குறைந்தது. இவரைப் போலவே, "டிரைஜெமினல் நியூரால்ஜியா' என்ற வியாதியால், ஒன்றரை ஆண்டு காலம் அவதிப்பட்டவர் விஜயா. அவருக்கு வயது, 55. அவருக்கு வலது கன்னத்தில், கடுமையான வலி தோன்றும். பேசுவது, குளிப்பது, பல் தேய்ப்பது, முகத்தில் காற்று படுவது எல்லாமே வலியை அதிகப்படுத்தியது. சென்ற ஆண்டு அவருக்கு, பல் டாக்டரிடம் பற்கள் பிடுங்கப்பட்டு, பிறகு, Root Canal என்ற சிகிச்சை நடந்தது.
இவ்வாறு பலவந்தமாக பற்கள் பிடுங்கப்பட்ட சிகிச்சையும், இவருக்கு, முகத்தில் தோன்றிய நரம்பு சம்பந்தப்பட்ட வாத நோய்க்கு, ஒரு காரணமாக இருந்தது. இவருக்கும், ஆங்கில நரம்பு டாக்டர், ஒரு ஆண்டு காலம் மருந்துகள் கொடுத்து, மருத்துவம் செய்தும், வியாதிக்கு எந்த குறைவும் காணவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மருந்துகளை எடுக்குமாறு கூறினார். இந்த வியாதிக்கு, ஆயுள் முழுக்க மருந்து தேவைப்படும் என்றும், எச்சரித்தார். இந்த நிலையில் விஜயா, ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டார். இவரும், மேற்கூறிய சிகிச்சைக்கு, மருத்துவமனையில் தங்கி, மூன்று மாதங்களில் முழுமையாக குணமடைந்தார்.

No comments:

Post a Comment