Lord Siva

Lord Siva

Friday 13 April 2012

பன்றிக் காய்ச்சல் -தடுப்பூசி அவசியமா

Posted On April 13,2012,By Muthukumar
"பன்றிக் காய்ச்சல் தொடர்பான சுகாதாரத் துறை அமைச்சரின் அறிவிப்பும்; காய்ச்சலை பரப்பும் வைரஸ் பற்றிய தகவலும், பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி குறித்த குழப்பத்தை, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ள, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தடுப்பூசி விஷயத்தில் குழப்பமான மனநிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அவசியமில்லை:"தொற்று நோய் அளவுக்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் இல்லாததால், தடுப்பூசி தேவையில்லை' என, சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேலும், காய்ச்சலை பரப்பும், "எச்1 என்1' வைரஸ், பருவ நிலைக்கு ஏற்ப, தன்னை
தகவமைத்துக் கொள்ளும்; பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி, ஓராண்டில் காலாவதி ஆகிவிடும் போன்ற தகவல்கள், தடுப்பூசி தொடர்பான குழப்பத்தை அதிகரித்துள்ளது.
காலாவதி தேதி...:இதுகுறித்து, தடுப்பு மருத்துவப் பிரிவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறியதாவது: பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, ஓராண்டிற்குள் காலாவதி ஆகும்படி இருந்தால், அதில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் இயல்பும் காரணமாக இருக்கலாம். "எச்1 என்1' வைரஸ், உருமாற்றம் பெற்று விட்டதாக, உலக சுகாதார நிறுவனம், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.எனவே, கடந்த முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் (ஓராண்டிற்கு முன்), தற்போது மீண்டும் போட வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்கள், பன்றிக் காய்ச்சலின்
பீதியிலிருந்து விடுபட, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.வெளிச் சந்தையில் கிடைக்கும், "பான்டிபுளு' தடுப்பூசியின் காலாவதி தேதியை, கவனித்து வாங்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே, இதை போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பரிசோதனைக்கு ரூ.3,000:பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறிவதற்கான பரிசோதனை செய்ய, 12 தனியார் ஆய்வகங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆய்வக உரிமையாளர்களுடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், நோய் கண்டறியும் பரிசோதனைக்கு, 5,000 முதல், 7,000 ரூபாய் வரை இருந்த கட்டணத்தைக் குறைத்து, 3,000 ரூபாய் மட்டுமே, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களும் வசூலிக்க வேண்டும் என, அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். ஆய்வக உரிமையாளர்கள், இதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த பரிசோதனை விவரங்களை, அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை, அரசின், "கிங்' நிலைய ஆய்வகத்தின் மூலம், தரக் கட்டுப்பாடுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது

No comments:

Post a Comment