Lord Siva

Lord Siva

Saturday 31 December 2011

வாசம்’ பிடித்தால் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்!

Posted On Dec 31,2011,By Muthukumar

ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா? அவரது வாசத்தைக் கொஞ்சம் மோப்பம் பிடித்தாலே போதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதுதொடர்பான ஆய்வை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் ஆய்வுக்கு உதவிய தன்னார்வலர்களிடம், சிலரின் ஆடை மணத்தை மோப்பம் பிடிக்கச் செய்து, அதன் மூலம் அவர்களைப் பற்றிக் கணிக்கச் செய்தனர்.
அப்போது அவர்களின் கணிப்பு முழுக்க முழுக்கச் சரியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் பொருந்துவதாக இருந்தது. நமக்கு ஒருவரைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில், காணும், கேட்கும் விஷயங்களுடன், அவரது `வாசமும்' முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் போலந்து ஆய்வாளர்கள்.
``நாம் ஒவ்வொருவரும் நமது தோற்றத்தின் மூலம் மட்டுமின்றி, வாசத்தின் மூலமாகவும் நம்மை வெளிப்படுத்துகிறோம்'' என்று இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, வுரோகிளாவ் பல்கலைக்கழகத்தின் அக்னீஷ்கா சொரோகோவ்ஸ்கா கூறுகிறார்.
இந்த ஆய்வுக்காக ஆய்வாளர்கள் 30 ஆண்களையும், 30 பெண்களையும் தொடர்ந்து 3 நாள் இரவு வெள்ளை காட்டன் டீ-ஷர்ட்களை அணியும்படி கேட்டுக்கொண்டனர். அவர்கள் எந்த வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தக் கூடாது, சோப் கூட உபயோகிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த `வாசனை தானக்காரர்களிடம்' இருந்து பெறப்பட்ட டீ-ஷர்ட்களை 100 ஆண்களும், 100 பெண்களும் மோப்பம் பிடித்துக் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டது. பின்னர் அந்தக் கருத்துகளை, டீ-ஷர்ட்களை அணிந்தவர்களிடம் தெரிவித்து, எதெல்லாம் சரி என்று கேட்கப்பட்டது. அப்போது, சில கணிப்புகள் பொருந்தவில்லை என்றபோதும், சில கணிப்புகள் மிகப் பொருத்தமாக இருந்தன. வாசத்தைக் கொண்டே ஒருவரின் ஆளுமையைக் குறிப்பிடத்தக்க அளவு கண்டுபிடித்துவிடலாம் என்பது புதுமையான விஷயமாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment